சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு.. மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
Recommended Video
சேலம்: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதைக் கண்டித்து சேலத்தில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது.
மேல்முறையீடு
மேலும், இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கேவியட் மனு
இம்மனுவை உச்சநீதிமன்றம் ஜூன் 3 ம் தேதி விசாரிக்க உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருப்புக் கொடி
இதையடுத்து சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதைக் கண்டித்து, சேலம் அருகே பருத்திக்காடு பகுதியில் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டு
மேலும் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் பெரும் தோல்வியை தழுவியதையடுத்து பழிவாங்கும் நோக்கத்திலேயே இத்திட்டத்தை விரைந்து முடிக்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எச்சரிக்கை
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.