உயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்
சேலம்: 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் என மீண்டும் உறுதிபட கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சேலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சேலம் அருகேயுள்ள குப்பனூர் சீரிக்காட்டில், மண் சட்டியையும், மண்ணையும் கையில் ஏந்தி அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 8 வழிச்சாலைக்காக ஒரு பிடி மண்ணை கூட விட்டுத்தர மாட்டோம் என, மண் சட்டியினை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆவேச முழக்கமிட்டனர்.
இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், முதலில் 8 வழிச்சாலை என முதல்வர் அறிவித்தார். பின்னர் 6 வழிச்சாலையாக அது குறைக்கப்பட உள்ளதாக கூறினார். பின்னர் இதனை பசுமை வழிச்சாலை என்றார். சமீபத்தில் விரைவுச்சாலை என்றார் முதல்வர்.
என்ன திட்டம் மத்திய அசு கொண்டு வர துடிக்கிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாமல், மாற்றி மாற்றி பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதே போல 8 வழிச்சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் பொய் கூறி வருகிறார்.
93 சதவீதம் ஆதரவு இருக்கும் பட்சத்தில் எதற்கு விவசாயிகளின் ஆதரவு பெற்றும், மக்களை சமாதானப்படுத்தியும் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறுகிறார். இதிலிருந்தே தெரியவில்லையா அவர், ஊடகங்களிடம் மாறி மாறி பொய் பேசி வருவது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத்திய அரசுக்கு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் கமிஷன் பெறலாம் என்ற ஒரே காரணத்திற்காக சொந்த மக்களையும், விவசாயிகளையும் முதல்வர் அழிக்க நினைப்பதாக குமுறினர். நீங்கள் பெட்டி பெட்டியாக சம்பாதிக்க, நாங்கள் சட்டியெல்லாம் எடுத்து கொண்டு தெருவில் நிற்க வேண்டுமா என முதல்வருக்கு விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காக தான், இந்த 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் துடிக்கின்றன என சரமாரியாக குற்றம்சாட்டினர். வேறு யாரும் எங்களை போராட்டத்திற்கு தூண்டிவிடவில்லை. முதல்வரே தான் தூண்டி விடுகிறார்.
உயிரே போனாலும் எங்கள் நிலங்களை விட்டுத்தர மாட்டோம் என சொல்லியும், திரும்ப திரும்ப 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது இந்த தொடர் பேச்சே தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தை விட மோசமான பிரச்சனைகள் உருவாவதற்கு தங்களை தூண்டி விடுவதாக சாடியுள்ளனர்.
எங்கள் உயிரை விடவும் தயாராக இருக்கிறோம். உயிரை விட்டாலும் விடுவோமே தவிர, ஒருபிடி மண்ணை விட்டு தர மாட்டோம் என உணர்ச்சிப்பூர்வமாக கூறினர் மண் சட்டியையும் மண்ணையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.