பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கு சலுகை காட்டிய 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை விதிமுறைகளை மீறி உறவினர்களை சந்திக்க அனுமதித்ததால் 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சேலம் கமிஷனர் நஜ்மல் ஹோதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
Recommended Video
தமிழ் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக நேற்று, சேலம் சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் மீண்டும் காவல்துறை வாகனம் மூலம் சேலத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? பாலியல் வழக்கில் எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
வழியில் நிறுத்தப்பட்ட காவல்துறை வாகனம்
அப்போது காவல்துறை வாகனம், கோவை விமான நிலையம் அருகே இடையில் நிறுத்தப்பட்டது. அங்கே ஏற்கனவே 8 கார்களில் கைதாகியுள்ள நபர்களின் குடும்பத்தினர் வந்து காத்திருந்தனர். அங்கே வைத்து, நான்கு நபர்களும், அவரவர் உறவினர்களை சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். காவல்துறை வேன் நடுவழியில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் உறவினர்கள் அங்கே சந்திப்பு நடத்திய விவகாரம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் நீதிமன்ற அனுமதி பெறாமல் இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட நபர்களை சந்திக்க கூடாது என்பது விதிமுறையாகும். நீதிமன்ற அனுமதியை பெற்றாலும் நீதிமன்ற வளாகத்தில் வைத்துதான் சந்தித்து பேச முடியுமே தவிர, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வழி மறித்து பேசவே கூடாது.
7 பேர் சஸ்பெண்ட்
விதிகளை மீறி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் உட்பட காவலர்கள் 7 பேரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். ஏழு பேரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் கமிஷனர்.
வழக்கு விசாரணை
இதனிடையே, மகளிர் நீதிமன்றத்தில் நேற்றைய நீதிமன்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகலில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் அடங்கிய சில ஆவணங்கள் விடுபட்டு உள்ளதாகவும், அவற்றை வழங்க கோரியும் அவர்களது தரப்பு வக்கீல்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஒத்தி வைப்பு
அவர்களுக்கு, குற்ற நகலில் விடுபட்ட கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி நந்தினிதேவி. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், அதிமுக மாணவரணி பிரமுகர் அருளானந்தம் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மற்றும் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், விரைவில் சாட்சி விசாரணை துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.