வறுமையில் சிக்கி.. தலைமுடியை விற்று பசியாற்றிய பிரேமாவுக்கு.. பிறந்தது விமோச்சனம்.. இப்ப ஹேப்பி!
தலைமுடியை விற்று குழந்தைகளின் பசி தீர்த்துள்ளார் தாய் ஒருவர்
சேலம்: "கொடியதிலும் கொடியது இளமையில் வறுமை".. வறுமையின் பிடியில் சிக்கி கொண்ட, தன் தலைமுடியை மழித்து.. மொட்டை அடித்து.. அந்த தலைமுடியை விற்று.. தன் குழந்தைகளின் பசியை போக்கி பெரும் துயரத்துக்குள்ளான பிரேமாவுக்கு இப்போது விடிவு காலம் பிறந்துள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி செல்வம் - பிரேமா. 2 பேரும் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள்.
மகிழ்ச்சியுடன் சென்றது குடும்ப வாழ்க்கையில் நண்பர் ஒருவரின் குறுக்கீட்டால் துன்பம் கூடியது. அவரது தவறான வழிகாட்டலால் கடன் வாங்க ஆரம்பித்த செல்வம் கடைசியில் அதில் சிக்கிக் கொண்டு அவதிக்குள்ளானார். கிட்டத்தட்ட 4.50 லட்சம் வரை கடன் வாங்கிவிட்டார்.
நெருக்கடி
நண்பரும் ஏமாற்றவே கடன், வட்டி, வறுமை, ஏமாற்றத்தில் தவித்து போன செல்வம்.. கடன் கொடுத்தவர்கள் நெருக்கவே அவமானம் தாங்க முடியாமல் 7 மாசத்துக்கு முன்பு செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கடனையும், அவதியையும் தாங்கி கொண்ட பிரேமாவால், கணவரின் தற்கொலையை தாங்க முடியவில்லை.. வீட்டு செலவுக்கு பணம் இல்லை.. தனியாளாகவே வீமனூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் பிரேமா கூலி வேலைக்கு போனார்.. ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.. தினம் தினம் 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லை.. பசியால் வாட ஆரம்பித்தனர்.
மொட்டை
என்ன செய்வதென்றே தெரியாத சூழலில் பிரேமா, குழந்தைகளை அழைத்து கொண்டு கோயிலுக்கு போனார்.. தன் தலையை மொட்டை அடித்து, அந்த தலைமுடியை 150க்கு விற்றார்.. 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கி தந்தார்.. மிச்சமிருந்த பணத்தில் விஷம் வாங்கி தற்கொலைக்குத் திட்டமிட்டபோதுதான் மீட்கப்பட்டார்.
உதவி
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் கேள்விபட்டு.. பிரேமாவை சந்தித்து, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரது நிலை அறிந்து பலர் உதவி செய்ய முன்வந்தனர். வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரே பிரேமாவுக்கு உதவி செய்ய முன்வந்தது முக்கியமானது. தற்போது பிரேமாவுக்கு தேவையான உதவி கிடைத்து விட்டதாம். அவருக்கு அரசின் உதவி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாம். எனவே அவர் தற்போது நிம்மதியுடன் இருப்பதாக உதவி செய்த சேலம் பாலா தெரிவித்துள்ளார்.
பாலா
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நன்றி என்பது ஒரு வார்த்தையல்ல.. அது ஒரு உணர்வு. ஒரு சொட்டு கண்ணீர் சொல்லும் நன்றியை ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பிரேமா என்கிற பெண்ணைப்பற்றியும், அவருக்கு வறுமையால் நேர்ந்த கொடுமையை பற்றியும் நேற்று மாலை நான் போட்ட பதிவிற்கு கிடைத்த வரவேற்பில் சத்தியமாக நான் ஆடிப்போய்விட்டேன். கருணை கொண்ட உள்ளங்கள் கருமேகங்களை போல கூடி அன்பை மழையாக பொழிந்து விட்டது.
மறுமொழி
பிரேமா இனி தவறான முடிவு எடுக்க மாட்டார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துவிட்டது. இத்தனை அன்புக்கும் என்ன மறுமொழி சொல்வதென்று பிரேமாவிற்கு புரியவில்லை. அவர் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வருகிறது. ஒரு சொட்டு கண்ணீர் ஓராயிரம் நன்றிகளுக்கு சமம். அத்தனையும் நண்பர்களே உங்கள் பாதத்தில் சமர்பிக்கிறேன்.
உதவிக்கரம்
நீண்ட நம் உதவிக்கரங்களும், அன்பும் அந்த பெண்ணுக்கு புது தைரியத்தை கொடுத்திருக்கிறது. உடனடியாக கழுத்தை நெரிக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்த்து வைக்க இப்போது வந்திருக்கும் பணம் போதும். இனி நண்பர்கள் பணம் அனுப்ப வேண்டாம். பிரேமாவும் அதை எதிர்பார்க்கவில்லை. இனி ஒரு வண்டி வாங்கிகொடுத்தால் போதும் அண்ணா பழம் காய்கறிகள் விற்று மீதி கடனை நானே சம்பாதித்து கட்டிக் கொள்கிறேன் என்கிறார். அவர் தன்னம்பிக்கைக்கு ஒரு பெரிய சல்யூட், அவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்த உங்களுக்கும் ஒரு பெரிய சல்யூட். இனி பிரேமா பிழைத்துக்கொள்வார். இனி அவருக்கு தேவை, நாங்கள் இருக்கிறோம் சகோதரி என்கிற வார்த்தைகள் மட்டுமே..!!
வண்டி
இதைத்தாண்டி, அவருடைய பிள்ளைகள் இருவரும் படிக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். லோக்கலில் உள்ள நண்பர்கள் உதவியோடு வண்டி விரைவில் அவருக்கு வாங்கித்தரப்படும். அந்த பெண்ணுடைய வாழ்வில் இனி நடக்கப்போகும் ஒவ்வொரு நல்ல விஷயங்களும் இங்கு பதிவேற்றுகிறேன். பிரேமா நல்லா இருக்கணும் என்பதை மட்டுமே மனதில் ஏந்தி உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு அவர் நன்றாக வாழ்வதையும் உறுதிப்படுத்துவோம்.
வேண்டுகோள்
அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் என்றும் உறுதுணையாக நிற்போம். உதவிய நண்பர்களுக்கும், ஷேர் செய்த நண்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். பதிவை நீக்கிவிடுங்கள். எங்காவது தவறாக போய்விட கூடாது என்பதால் சொல்கிறேன். தனியாக வாழும் பெண்ணாக அவருடைய அச்சத்தை புரிந்துக்கொண்டு அதற்கு மதிப்பளிப்போம் நண்பர்களே.. என்று பாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாசகர்களுக்கு நன்றி
நம்முடைய வாசகர்களும் பிரேமாவின் நிலை அறிந்து உதவி செய்யக் குவிந்து விட்டனர். இருப்பினும் தற்போது பிரேமாவுக்கு போதிய உதவி கிடைத்து விட்டதாலும், தமிழக அரசின் உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாலும், பிரேமாவும் தனக்கு கிடைத்த உதவிகளே போதுமானது என்று கூறியிருப்பதாலும் அவரது தொடர்பு விவரங்களை வெளியிடவில்லை. வாசகர்கள் காட்டிய துரிதமான அன்புக்கும், செய்ய முன்வந்த உதவிகளுக்கும் மிகப் பெரிய நன்றிகள்.