பொள்ளாச்சி கைதிகளுக்கு சலுகை.. மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சஸ்பெண்ட் ஆன போலீஸார்!
சேலம்: மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு பொள்ளாச்சி பாலியல் கைதிகளை, உறவினர்களுடன் பேச வைத்ததால் சேலம் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு 7 போலீசார் சஸ்பெண்டான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் ஏராளமான இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ பதிவு செய்து கொடுமைப்படுத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் தமிழக போலீசார் விசாரித்தனர்.
ஆனால் வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
திருநாவுக்கரசு
இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகியான அருளானந்தம் உட்பட 4 பேர் கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை
ஜாமீன் கேட்டு அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 13ம்தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சேலத்தில் இருந்து திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.
நடுரோட்டில் வாகனம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பும் போது கோவை பீளமேடு அருகே நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி கைதிகளை உறவினர்களுடன் பேச வைத்தது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல்கோடா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில், அவர்கள் விதிமுறைகளை மீறி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது உறுதி செய்யப்பட்டது.
பேச வைத்தது ஏன்
இதனையடுத்து, சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம் உட்பட 7 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து சஸ்பெண்டான 7 பேரிடமும் விசாரணை நடந்தது. அதில், மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வாகனத்தை நடுவழியில் நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தனராம். கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டார்களாம். அத்துடன் தங்கள் உறவினர்கள் நீண்ட நாட்களாக மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை. நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம் என போலீசாரிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக் கூடாது என போலீசார் அனுப்பி விட்டனர்.
விசாரணையில் தகவல்
அதன்பிறகு தான் பீளமேடு வரை வாகனத்தை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். இதனால் ஒருகட்டத்தில் மனமிறங்கிய போலீசார் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணியை வாங்கி உள்ளனர். அத்துடன் கைதிகளுடன் உறவினர்களை பேச வைத்துள்ளனர். வாங்கிய பிரியாணி பொட்டலங்களை அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது உயர் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.