விரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி
சேலம்: விரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார். அதிமுகவில் இணைவார் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அமமுக அதிருப்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் ரெட்டிப்பட்டியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அங்கு மாங்கனி நகரில் மாறுதல் காண்போம் என பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.இக்கூட்டத்தில் அதிமுகவில் இணைவது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்
பட்டா இல்லா இயக்கமாக அமமுக உள்ளது. அமமுக இயக்கம் அல்ல அது ஒரு மன்னார் அன்ட் கோ கம்பெனி. அமமுகவிற்காக உழைத்தவர்களின் உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது.
இன்முகத்தோடு வரவேற்பு
தினகரனை நான் ஆதரித்தற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை நான் வைத்திருந்தாலும் அவரை சேலத்தில் சந்திக்க சென்ற போது இன்முகத்தோடு என்னை வரவேற்றார்.
நீள்கிறது தினகரனை விட்டு செல்லும் முக்கிய நிர்வாகிகளின் லிஸ்ட்!.. அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி
தேர்தல் ஆணையம்
தமிழக முதல்வரின் ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால் தாய் வீடான அதிமுகவில் இணைகிறேன். மேலும் பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் பாதகமில்லாமல் ஆட்சி நடைபெறுகிறது. ஸ்லீப்பர் செல் அதிமுகவில் யாரும் இல்லை. அமமுக கட்சியை அங்கீகரிக்ககூடாது என கடந்த மாதம் 23 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளேன்.
சசிகலாவை வெளியே கொண்டு வர முயற்சி
வாழ்க்கையில் விசுவாசமே இல்லாத மனிதர் டி டி வி தினகரன். சசிகலா மீது உள்ள மதிப்பும் மரியாதையும் குறையவில்லை. சசிகலா முதல்வராக வர வேண்டும் என தினகரன் விரும்பவில்லை. சசிகலாவை வெளிகொண்டுவர தினகரன் ஒரு முயற்சியும் செய்யவில்லை.
அதிமுகவில் இணையவில்லை
சசிகலா மிக விரைவில் வெளியில் வருவார்கள். சசிகலாவும், இங்கு உள்ள ஆட்சியாளர்களும் ஒன்றிணைவார்கள். தினகரனை சேர்த்து கொள்ள மாட்டார்கள். தமிழக அரசியலில் தான் தன்னுடைய பங்களிப்பு இருக்கும். எதையும் எதிர்ப்பார்த்து அதிமுகவில் இணையவில்லை. தினகரன் எப்போது அழைத்தாலும் நேருக்கு நேர் சந்தித்து விவாதம் நடத்த தயார். தினகரன் 13 பேரை வைத்து கொண்டு ஐடி விங் நடத்தி கொண்டிருக்கிறார் என்றார் புகழேந்தி.