தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது
சேலம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தொடர்ந்து 2வது நாளாக மழை பெய்து வருகிறது. பாபநாசம், திருவிடைமருதூர், தாராசுரம், அம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வண்டிச்சோலை, வெலிங்டன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகள், தேயிலை போன்றவை நல்ல மகசூல் தரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .
நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவாட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார்,திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.