1996-ல் திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்து தப்பு செஞ்சிட்டீங்க ரஜினி... பொன்னார் பொழிப்புரை
சேலம்: 1996-ல் ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்தி திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர ரஜினிகாந்த் உதவி செய்தது மிகப் பெரிய தவறு என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தாம் விரும்புகிற மாற்று அரசியல் தொடர்பான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்; எழுச்சி ஏற்பட்டால்தான் தாம் அரசியலுக்கு வருவேன்; அப்படியும் அரசியலுக்கு வந்தால் கட்சித் தலைவராகத்தான் இருப்பேன்; முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என அறிவித்தார். ரஜினிகாந்தின் இந்த புலம்பல் பேட்டி பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை தாம் அரசியலுக்கு வரவே விரும்பவில்லை; என்னை ஆளைவிடுங்க என்பதாகத்தான் நேற்று தமது செய்தியாளர் அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டார். இதை புரிந்து கொள்ளாதவர்கள் ரஜினிகாந்தின் கொள்கை வழி கூடிடுவோம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி மீது அன்புமழை பொழியும் தேமுதிக... அரசியல் மாற்றம் உறுதி என பிரேமலதா பேச்சு
பாஜக முதுகில் சாட்டையடி
இன்னொரு பக்கம் ரஜினிகாந்தின் முதுகில் சவாரி செய்துவிடலாம் என கனவு கொண்டிருந்த பாஜகவின் முதுகில் சுளீர் என அடித்தது போல இந்த பேட்டி அமைந்துவிட்டது. இதனைத்தான் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தமது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினி செய்த தப்பு
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் இல்ல திருமணத்தில் பங்கேற்ற பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1996-ல் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ததாக கூறி இருக்கிறார் ரஜினிகாந்த். அன்று ரஜினிகாந்த் தவறு செய்துவிட்டார். திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க ரஜினிகாந்த் உதவி இருக்கக் கூடாது.
தனிக்கட்சி ரஜினி
ரஜினிகாந்த் பாஜகவில்தான் இணைய வேண்டும் என்பது ஒவ்வொருவரது விருப்பம். ஆனால் தனிக்கட்சி தொடங்கும் ரஜினியிடம் இப்போது அதை அப்படி கேட்க முடியாது. பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரையில் திறமையானவர். பாவம் அவரும் தோல்வியை ருசித்து பார்க்கப் போகிறார். சி.ஏ.ஏ உள்ளிட்டவை குறித்து திமுகவினர் பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
மிரட்டல் இல்லை
அதிமுக அமைச்சர்களை பாஜக மிரட்டிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். அப்படி யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. எங்களுடன் கூட்டணியில் இருந்த போது திமுக அமைச்சர்கள் மிரட்டப்பட்டார்களா? அல்லது திமுக அமைச்சர்களும் நடுநடுங்கித்தான் போயிருந்தார்களா? இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.