அடேங்கப்பா.. பார்க்கிங்-க்கு மட்டும் 20 ஏக்கரா.. திருச்சியை விஞ்சும் சேலம் பாஜக இளைஞரணி மாநாடு
சேலம்: நாளை(பிப்.21) நடைபெறவுள்ள பாஜக மாநில மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.
தமிழக பாஜகவின் இளைஞரணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார்.
மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, தேசிய பாதுகாப்பு படையினர் 20 பேர் சேலத்திற்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சட்டமன்றப் பேரவையின் கட்டிட வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்க மாநாடு திடலின் இருபுறமும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு சாலையோரங்களில் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2013ம் ஆண்டு திருச்சியில் பாஜக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அப்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தற்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இளைஞரணி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.