புயல் மழை பாதிப்பு.. கடலூருக்கு கை கொடுக்கும் சேலம்.. பணியாளர்களும், உபகரணங்களும் கிளம்பியாச்சு
சேலம்: சேலத்தில் இருந்து புயல் மீட்பு பணிக்காக கடலூருக்கு சென்றனர் பணியாளர்கள். மீட்பு பணிக்கான உபகரணங்கள்,மாநகராட்சி லாரிகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது (நிவர்) அதி தீவிர புயலாக உருவெடுத்து மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் 88 தூய்மைப் பணியாளர்கள்,6 மேற்பார்வையாளர்கள் 4 மின் பணியாளர்கள்,3 குடிநீர் இணைப்பு பணியாளர்கள்,6 செயல் அலுவலர்கள், 3 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 110 பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் மாநகராட்சி லாரிகள் கடலூர் மாவட்டத்திற்கு மீட்புப் பணிக்காக சேலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
