விவசாய காவலனாக விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடியார்.. வந்தது சரபங்கா திட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்!
சேலம்: ரூ.565 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இது சத்தமில்லாத ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதன் மூலம் 4 ஆயிரத்து 238 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறப்போகிறது.
Recommended Video
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, விவசாயம், நீர் மேலாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை எடப்பாடியார் வெளியிட்டார்.
காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது சட்டசபையில் சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டு அசத்தப்பட்டது.
அடுத்த அதிரடி
இந்த நிலையில்தான், சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி அடுத்து ஒரு மைல் கல்லை கடந்துள்ளார். இந்த திட்டம் பற்றி பார்க்கலாம் வாங்க: சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை இருக்கிறது. இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பலனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. வறட்சி பகுதிகளான நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு இந்த தண்ணீரை திருப்பிவிட்டால், அதனால், வறட்சி போய், விவசாயம் செழித்து மக்கள் வாழ்வு வளம் பெறும் என்பது மக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது.
சரபங்கா
இந்த கோரிக்கையை கனிவோடு பரிசீலித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் சரபங்கா திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டார். இதற்காக ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.
|
அதி வேகம்
முதல்வர் உத்தரவிட்டதோடு, பணிகள் கிடப்பில் போடப்படவில்லை. அதி வேகத்தில் செயல்பட்டனர் அதிகாரிகள். பொதுப்பணித்துறை சார்பில் அதற்கான ஆய்வு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர் வளத்துறை சார்பில் உபரி நீரை கொண்டு செல்லும் இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதோ இன்று, சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி அசத்திவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பாளி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி ஏரியில் இன்று இதற்கான விழா நடைபெற்றது.
ஏரிகளுக்கு தண்ணீர்
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஏரிகளின் மூலம் 49.06 ஏக்கர் பரப்பளவில் நிலங்களும், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 5 பஞ்சாயத்தில் உள்ள 8 ஏரிகளின் மூலம் 297.27 ஏக்கர் பரப்பளவும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 பஞ்சாயத்தில் உள்ள 4 ஏரிகளின் மூலம் 333.41 ஏக்கர் பரப்பளவு நிலங்களும், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 9 பஞ்சாயத்தில் உள்ள 28 ஏரிகளின் மூலம் 1,129.60 ஏக்கர் பரப்பளவும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 8 பஞ்சாயத்தில் உள்ள 21 ஏரிகளின் மூலம் 1,533.72 ஏக்கர் பரப்பளவும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 3 பஞ்சாயத்தில் உள்ள 11 ஏரிகளின் மூலம் 193.49 ஏக்கர் பரப்பளவு நிலங்களும் இந்த திட்டத்தால் பயன் அடையும்.
நீர்வளம் உயரும்
சங்ககிரி சட்டமன்ற தொகுதியில், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகளில் உள்ள 7 ஏரிகளின் மூலம் 170.23 ஏக்கர் நிலங்கள், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 பஞ்சாயத்தில் உள்ள 7 ஏரிகளின் மூலம் 441.89 ஏக்கர் நிலங்கள் மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 2 பஞ்சாயத்தில் உள்ள 11 ஏரிகளின் மூலம் 89.33 ஏக்கர் நிலங்களும், என இந்த பகுதியிலுள்ள மொத்தம் 100 ஏரிகளின் மூலம் 4 ஆயிரத்து 238 ஏக்கர் நிலங்கள் இந்த திட்டத்தால், பாசன வசதி பெறும். இந்த திட்டத்தால், நீர்வளம் உயரும், மண்வளம் பெருகும்.
அதிக பொருட்செலவு இல்லாமலும் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் நீரேற்று திட்டத்தின் வழியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதுபோன்ற விவசாயம் சார்ந்த திட்டங்களால், மண்ணின் காவலராக மாறிவருகிறார் எடப்பாடியார் என்கிறார்கள் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.