ரஜினிக்கு இப்படி மிரட்டல் வருது.. விவரித்து பாதுகாப்பு கேட்ட சேலம் ரசிகர்கள்
சேலம்: பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால், ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு கேட்டு சேலத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் மாநகர காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.
அண்மையில் துக்ளக் பொன் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் பெரியார் சேலத்தில் நடத்திய பேரணியில் ராமர் சீதா படங்கள் நிர்வாணமாக இருந்தது என்றும் செருப்பால் அடிக்கப்பட்டது என்றும் இதை துக்ளக் தான் தைரியமாக பிரசுரித்தது என்றும் கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சு முற்றிலும் தவறானது என்றும், இதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.
நீராருங் கடலுடுத்த.. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நடனம் ஆடிய டிக்டாக் தமிழன்.. வைரல் வீடியோ
கடும் எதிர்ப்பு
ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்ததுடன் பத்திரிக்கையில் வந்த செய்தியைத்தான் தான் சொன்னதாக கூறினார். இதையடுத்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டம் நடத்தினர். பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
போலீசில் மனு
இந்நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சேலம் ரசிகர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பழனிவேல் தலைமையில் திரண்டு வந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் நேற்று ரசிகர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.
மன்னிப்பு கேட்கவில்லை
அந்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விழாவில், பெரியார் பற்றி பேசியதாகவும், இதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவருடைய வீட்டை முற்றுகையிட்டட நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லி விட்டார் என்று மனுவில் விவரித்துள்ளனர்.
படத்துக்கு தடை
போராட்டத்தில் ஈடுபடுவோர், ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால், அவருடைய படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று போராடுவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளதாகவும் ரசிகர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர், ரஜினி நடித்த படம் வெளியாகாத வகையில் தடை கேட்டு வழக்கு தொடர்வோம் என்றும், தகாத வார்த்தைகளால் மிரட்டி வருகிறார்கள் என்றும் ரஜினி ரசிகர்கள் புகாரில் தெரிவித்துள்ளார்கள்.
ரஜினிக்கு பாதுகாப்பு
உண்மையில், நடிகர் ரஜினி பெரியார் பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்தான் அவர் பேசியதாவும் கூறியுள்ள ரஜினி ரசிகர்கள்,ரஜினிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது ஒருபுறம் எனில் ரஜினிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகிறார்கள்.