சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான டெண்டர்.. மேலும் 20 நாள்களுக்கு நீட்டிப்பு
சேலம்: சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான சர்வதேச டெண்டருக்கான அவகாசம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் சேலம் இரும்பு உருக்காலையை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி தனியாருக்கு விற்க கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் சேலம் உருக்காலையை நடத்தி வரும் செயில் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி கடந்த கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்வதேச டெண்டருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என பகிரங்க டெண்டர் அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. இதன்படி ஆகஸ்ட் 1ம்தேதி வரை டெண்டர் எடுக்க விண்ணப்பிக்கலாம் என செயில் நிறுவனம் அறிவித்து இருந்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவினை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தனியாருக்கு ஆலையை விற்க்கும் முயற்சியை கண்டித்து குடும்பத்தோடு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்றுடன் உருக்காலை டெண்டரில் பங்கேற்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 20 நாளுக்கு அவகாசத்தை செயில் நிறுவனம் நீட்டித்துள்ளது இதன்படி ஆகஸ்ட் 21ம் தேதி டெண்டருக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.