சேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்!
Recommended Video
சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான 2 அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
ஸ்டீல் சிட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் தொழிற்துறையில் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அம்மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் கடந்த 3 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் ரூ.320 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பாலம் பணிகளில், நிறைவுபெற்ற பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
கவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி!
ரூ.320 கோடி செலவில்
கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்த இரண்டு அடுக்கு மேம்பாலம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 320 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
கட்டுமான பணிகள் நிறைவு
இந்த மேம்பால கட்டுமான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலை முதல் அழகாபுரம் காவல் நிலையம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
2 அடுக்கு மேம்பாலம் திறப்பு
இதைத்தொடர்ந்து இன்று காலை இரண்டு அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என சேலம் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் நீண்ட மேம்பாலம்
சேலம் 5 சாலையிலிருந்து 6.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு புறமும் செல்லும் இந்த 2 அடுக்கு பாலத்தை தாங்கி பிடிக்க 173 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலம் தமிழகத்தின் மிக நீண்ட இரண்டடுக்கு மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.