பொறுத்தது போதும்.. பொங்கிய அதிமுக.. சசிகலாவுக்கு எதிராக முதல் ஆக்ஷன்.. போலீசில் பரபர புகார்!
சேலம்: இதுவரை அமைதியாக இருந்த அதிமுகவினர் முதல் முறையாக சசிகலா மீது போலீஸ் ஆக்ஷன் எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா உடல்நலக்குறைவால் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரு அடுத்த ஒரு ரிசார்ட் பகுதிக்கு காரில் சென்றார்.
ஒரு கை பார்த்துவிடாலாம்.. சசிகலா வருகையால் ஒன்றுபட்ட இபிஎஸ் -ஓபிஎஸ்.. இனிதான் இருக்கு ட்விஸ்ட்!
சசிகலா காரில் அதிமுக கொடி
மருத்துவமனையில் இருந்து வெளியே சசிகலா வந்தபோது அங்கு கூடியிருந்த அனைவரும் ஒரு வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. ஏனெனில் அவரது கார் முன்பக்கத்தில் அதிமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் முறையே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வகித்து வருகிறார்கள்.
சட்ட விரோதம் என்ற அமைச்சர்கள்
இந்த நிலையில் சசிகலா அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். அதேநேரம் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். கட்சி விதிமுறைப்படி பொதுச்செயலாளர் பதவி தான் இருக்க முடியுமே தவிர ஒருங்கிணைப்பாளர் அல்லது துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இருக்க முடியாது என்று சசிகலா தரப்பினர் கூறி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
மேலும், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கட்சி கொடியை பயன்படுத்துவதற்கு சசிகலாவுக்கு முழு உரிமை இருக்கிறது என்பது அவர்கள் வாதம். இருப்பினும் கட்சி கொடியை பயன்படுத்தியது தவறு என அமைச்சர்களை தெரிவித்தாலும் கூட இன்னும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சேலம் அதிமுக
இந்த நிலையில், முதல் முறையாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் சேலம் நகர காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் அதிமுகவில் இருந்து சசிகலா ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில் அவர் கட்சி கொடியை பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக முதல் நடவடிக்கை
தமிழகத்தில் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், அதிமுகவினர் சிலர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்தி வருகின்றனர். அவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் முதன் முறையாக அதிமுக தரப்பில் சசிகலாவுக்கு எதிராக ஒரு பதிலடி துவங்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அது சேலத்தில் இருந்துதான். முதல் முறையாக சசிகலாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் சிலர் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.