அசத்தலாக ரெடியாகும் சேலம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும்
சேலம்: சேலம் விமான நிலையம் தரை இறங்கும் ஓடு தளத்தில் நவீன வசதிகளை செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே இனி விபத்து அச்சம் இல்லாமல் விமானங்களை தரையிறக்க முடியும்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் காலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.
மேலும் மாலை நேரங்களில் விமானம் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
மலைப் பகுதி
இந்த நிலையில் காமலாபுரம் விமான நிலையம் மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் பலநேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மேலும் இந்த விமான நிலையத்தை சுற்றியுள்ள சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை காரணமாக அங்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
தரையிறங்குவதில் தாமதம்
இதனால் பல நேரங்களில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் மேலே வட்டமிட்டு காலதாமதமாக தரையிறக்க படுகிறது. சில நேரம் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சிறு நகரங்களிலும் விமான சேவையை பலப்படுத்தும் முயற்சிக்கு இதனால் இடையூறுதான் ஏற்படுகிறது.
நவீன விளக்குகள்
எனவே இந்த பிரச்சனையை தவிர்க்க விமான தரையிறக்க ஓடுதளத்தில் அதிநவீன விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்பொழுது ஓடுதளம் வரிசையிலும், சுற்றுசுவர் எல்லை அறிய அதிநவீன விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. இதனால் 500 மீட்டர் உயரத்துக்கு மேலே விமானம் பறந்தால், தெளிவாக ஓடுதளத்தை பார்த்து விமானம் தரை இறக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் பயணம்
இந்த பணிகளால் இனிமேல் சேலத்தில் விமானங்களை தரையிறக்குவதில் பிரச்சினை ஏற்படாது. மக்கள் தயக்கமின்றி, விமானச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.