சேலம் அருகே தீ விபத்து.. 25 வீடுகள் தீயில் கருகியது
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே காலனியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 கூரை வீடுகள் சேதமாகின. இந்த தீ விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே முட்டைகடாய் காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இதில் மதி (47 வயது) என்பவருக்கு சொந்தமா வீட்டில் புதன்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவென பரவியது. இதில் அலறி அடித்தபடி மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். தங்களால் முடிந்த வரை தீயை அணைக்க போராடினார். அதேநேரம் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் வாழப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்க மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் 25 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது
தீ விபத்தில் சிக்கி கவியரசி 28 வயது, ஹரி 21 வயது, யுவராஜ் 27 வயது ஆகிய மூன்று பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடுமை.. லாக்டவுன் உத்தரவை மீறி இயங்கிய ஜவ்வரிசி ஆலையில் கசிந்த விஷவாயு.. 2 பேர் பலி.. சேலம் அருகே
தீ விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து நடந்த காலனியைச் சேர்ந்த பட்டுராஜ் (30) மதியம் வீட்டில் உணவு சமைத்திருக்கிறார். ஆனால் அவர் சமைத்தபின் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால் கேஸ் அடுப்பை அணைக்காமல் போய்விட்டார். இதுவே தீவிபத்துக்கு காரணம் என்று தெயிரவந்துள்ளது.
தீ விபத்தில் வீடுகள் சேதம் அடைந்தததால் அங்கு வசித்த மக்களுக்கு அயோத்தியப்பட்டினம் ஊராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் அனைத்து குடும்பங்களையும் தங்க வைத்தனர்.