ஆன்லைனில் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்- சேலம் மருத்துவமனையில் அக்கப்போர்
சேலம்: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆன்லைனில் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்ததால் சேலம் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 88 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 88 பேரும் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை.
இந்த 88 பேருக்கும் அரசு வழங்கும் சிறப்பு உணவுதான் வழங்கப்படுகிறது. பழச்சாறுகள் மட்டும் முட்டை உணவாக அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கான ஒரே அசைவ உணவு முட்டைதான்.
வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு! அந்தியூர் செல்வராஜ் நியமனம்!
பிரியாணி, தந்தூரி சிக்கன்
இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் தங்களது மொபைல் போன் மூலம் அசைவ உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளது. சேலத்தின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்திருக்கின்றனர். ஆர்டர் செய்தது கொரோனா நோயாளிகள் என்பதை யார் அறிவார்கள்?
முகவரியால் ஜெர்க்
கடமை தவறாத அந்த உணவு விநியோகிக்கும் நிறுவனமும் பிரியாணி, தந்தூரி சிக்கனை பேக்கப் செய்து கொண்டு வாடிக்கையாளரின் முகவரியை கேட்டிருக்கிறது. அப்போதுதான் அந்த நிறுவனத்துக்கு ஒரு ஜெர்க் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் சொன்ன இடம் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லவா? சரி என்னதான் நடக்கிறது என பார்த்துவிடுவோம் என டோர் டெலிவரி பாயும் மருத்துவனைக்கு பிரியாணி, சிக்கன் பார்சலுடன் சென்றுவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதி மறுப்பு
கொரோனா வார்டு பகுதியை நோக்கி ஆளை சுண்டி இழுக்கும் பிரியாணி, சிக்கன் வாசனையுடன் சென்ற டெலிவரிபாயை செக்யூரிட்டி ஆட்கள் மடக்கினர். அப்போதுதான் கொரோனா நோயாளிகள் 4 பேர் ஆன்லைன் மூலம் பிரியாணி, சிக்கனை ஆர்டர் செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை டீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இத்தகைய உணவுப் பொருட்களை அனுமதிக்க முடியாது என கறாராக மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பிவிட்டார்.
சேலத்தில் பரபரப்பு
ஏற்கனவே கோவையில் இதேபோல் கொரோனா நோயாளி ஒருவர் பிரியாணி கேட்டு அடம்பிடித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் அவர் வார்டின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் சேலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பிரியாணி, தந்தூர் சிக்கன் ஆர்டர் செய்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.