சேலம் மாநகராட்சி மெத்தனம்.. வேறு வழியில்லாததால் கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற பொதுமக்கள்
Recommended Video
சேலம்: மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காததால், சேலம் மாநகரை ஆட்டி வைத்த ஒற்றை நாய் பொதுமக்கள் கையால் இன்று அடிப்பட்டே இறந்துள்ளது.
சேலம் மாநகரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் சாலை வழியாக நடந்து செல்லும் சிறுவர் - சிறுமியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சேலம் களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சபட்டி உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை வெறிபிடித்த நாய் ஒன்று நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது.
குறிப்பிட்ட நாய் வெறிபிடித்து துரத்தி துரத்தி கடித்ததில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சாலையில் நடந்து சென்றவர்கள், கடையில் நின்று கொண்டிருந்தவர்கள், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை ஒரே ஒரு நாய் நேற்று கடித்து குதறி விட்டது.
இதனால் உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்களிடம், நாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று சொன்னதால், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்களும் செய்வதறியாது திகைத்தனர்
இதனிடையே நாய்களின் தொல்லை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் எத்தனையோ முறை புகார்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஒற்றை நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று மனிதர்களை கொத்து கொத்தாக வேட்டையாடிய அதே வெறிநாய், இன்று பட்டை கோயில் பகுதியில் தனது வேலையை காட்ட ஆயத்தமானது. ஆனால் சுதாரித்த அப்பகுதி மக்கள், தங்களை அச்சுறுத்தி வந்த நாயை அடித்து கொன்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் சரியாக செயல்படாத காரணத்தால், பொதுமக்கள் கையால் அடிவாங்கியே உயிரை விட்டுள்ளது அந்த ஒற்றை வெறி நாய்.