8 வழி சாலை வழக்கு தீர்ப்பால் சிறிதளவு மகிழ்ச்சி- முழுமையாக ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
சேலம்: சென்னை-சேலம் 8 வழி சாலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சிறிதளவு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை-சேலம் 8 வழி சாலை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பில் சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பித் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்ட வழக்கு- உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதுதான்!
திருப்பி ஒப்படைக்க உத்தரவு
மேலும் புதிய அறிவிக்கை வெளியிட்டு, சுற்றுச் சூழல் அனுமதி பெற்று நிலம் கையகப்படுத்தி 8 வழி சாலை திட்டத்தை தொடங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பின் அம்சத்துக்கு சேலம் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பட்டாசு வெடித்தனர்.
முழுமையாக ரத்து செய்திடுக
இத்தீர்ப்பு தொடர்பாக சேலம் ராமலிங்கபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 8 வழி சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
விவசாயிகள் துயரம்
எனவே தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொள்ளாமல் இந்த சாலையை மீண்டும் அமைக்க முற்பட்டால் விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டத்தால் இந்த ஆட்சியே மாற்றப்படும்.
தேர்தல் அறிக்கையில்..
எதிர்வரும் தேர்தலில் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றி பெற முடியாது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.