சேலம் அருகே தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா.. முதல்வர் அடிக்கல்.. என்ன வசதிகள் உள்ளது?
சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் ஐந்தாவது கால்நடை மருத்துவக்கல்லூரி அங்கு அமைய உள்ளது. தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல் நோக்குடன் கூடிய கால்நடை பூங்காவும் இங்கு அமைய உள்ளது.
மூன்று பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமையும். முதல் பிரிவில் நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, உள்நாட்டு மாட்டினங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை முதல் பிரிவில் அமைகிறது.
இரண்டாவது பிரிவில், பால், இறைச்சி, மீன் போன்ற உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது பிரிவில் பயிற்சி கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் அமைய உள்ளது.
சேலத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்.. திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!
தலைவாசலில் கால்நடை கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். கால்நடை வளர்ப்பு முறை, நாட்டினங்களை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப் பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு, கால்நடை தீவனங்கள் குறித்தும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11ம் தேதி வரை கால்நடை கண்காட்சி நடைபெறும்.