சாதி மறுப்பு திருமண விவகாரம்.. திடீர் திருப்பம்.. இளமதியைக் கடத்தியதாக கொளத்தூர் மணி மீது வழக்கு!
சேலம் இளமதி மேட்டூர் ஸ்டேஷனில் நேரில் ஆஜரானார்
சேலம்: சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இன்று மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜரானார்... கடத்தப்பட்ட இளமதி உயிருடன்தான் இருக்கிறாரா? இளமதி எங்கே என்று தமிழக மக்கள் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது தன்னுடைய வழக்கறிஞருடன் இளமதி ஆஜராகி உள்ளது மிகப்பெரிய திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரியை சேர்ந்தவர் செல்வன் என்பவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார். தன்னுடன் வேலை பார்க்கும் இளமதி என்ற பெண்ணை காதலித்தார். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.
இளமதியின் தந்தை பாமகவை சேர்ந்தவர் என்கிறார்கள்.. செல்வன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.
கல்யாணம்
அதனால் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க செல்வன் கோரிக்கை விடுக்கவும், அதன்படியே சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே பெரியார் படிப்பகத்தில் 4 நாளைக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது.
பாமக
ஆனால், பாமக மற்றும் கொங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் இளமதியை அன்றைய தினமே கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.. கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திவிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இளமதியை இன்னும் மீட்கவில்லை.. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கோரிக்கை
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியும் இதே கோரிக்கை விடுத்திருந்தார்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்பி செந்தில்குமாரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். மேலும் #இளமதி_எங்கே என்று இணையத்தில் ஹேஷ்டேக்கும் உருவாக்கி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் இதனால் தேசிய அளவில் இளமதி எங்கே என்ற வாசகம் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
ஹேஷ்டேக்
உண்மையிலேயே இளமதி உயிருடன்தான் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? சிசிடிவி ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் அவரை ஏன் மீட்க முடியவில்லை என்றுதான் பொதுமக்கள் கொந்தளித்தனர்.. இந்நிலையில் திடீர் திருப்பமாக மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இளமதி நேரில் ஆஜராகி உள்ளார்.. வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் இளமதி ஆஜராகி விளக்கம் தந்தார். அப்போது இளமதி பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
நேரில் ஆஜர்
இதனை அடுத்து, போலீசார் தொடர் ஆலோசனை நடத்தினர். எனினும் இது பற்றின உறுதியாக தகவல் வெளிவரவில்லை. இதனிடையே, சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக திவிக தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, இளமதியை திருமணம் செய்த செல்வன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஈரோடு பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.