சேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி தற்கொலை.. என்ன காரணம்?
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் துறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் முதுநிலை ஆய்வியல் நிறைஞர், ஆராய்ச்சி படிப்புகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவியர் விடுதியில் தங்கிப் படித்த மாணவி ஒருவர் இன்று விடுதியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவப்பு சட்டை அணிந்த மர்ம பெண்.. ஏபிவிபியின் முக்கிய உறுப்பினர்.. ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான உண்மை!
பல்கலைக்கழக நிர்வாகம்
இதுகுறித்து தகவலறிந்த சக மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்பூர் மற்றும் சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆணையர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாமாண்டு மாணவி
விசாரணையில் தூக்கிட்டு இறந்த மாணவி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர் திருமலை என்பவரின் மகள் நிவேதிதா என்பது தெரியவந்தது. இந்த மாணவி தாவரவியல் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வந்தார்.
பரபரப்பு
இந்த துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஒரு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதே துறையை சார்ந்த மாணவி பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு
மேலும் இது குறித்து எந்த தகவலும் பல்கலைகழக நிர்வாகத்திலிருந்தோ, காவல் துறையிடமிருந்தோ கிடைக்காததால் மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்து வருகின்றனர். எதனால் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.