ரஜினி பேச்சு: 50 ஆண்டுக்குப் பின் பெரியாருக்கு எதிர்ப்பு- சேலத்தில் ராமர் ஊர்வலம்- 50 பாஜகவினர் கைது
Recommended Video
சேலம்: 1971-ல் சேலத்தில் தந்தை பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சேலத்தில் ராமர் ஊர்வலம் நடத்த முயன்ற 50 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு மற்றும் ஊர்வலத்தை சுட்டிக் காட்டினார். மேலும் பெரியாரின் சேலம் பேரணியில் ராமர், சீதை உருவ படங்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு செருப்பு மாலை போடப்பட்டன எனவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்
இது உண்மைக்குப் புறம்பான தகவல்; பெரியார் குறித்து அவதூறாக பேசுகிறார் ரஜினிகாந்த் என பெரியார் இயக்கத்தினர் கூறிவருகின்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந் நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தியதற்கு பதிலடியாக சேலத்தில் இன்று பாஜகவினர் ராமர் சீதை ஊர்வலத்தை நடத்த முயன்றனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் சேலம் செவ்வாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள சீனிவாசா பார்க் அருகில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் பேரணி நடத்திய அதே பகுதியில் இந்த ஊர்வலம் நடத்த முயற்சிக்கப்பட்டது.
அப்போது ராமர் சீதை உருவ படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் கலந்து கொண்டனர். 1971-ல் தந்தை பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடத்திய போது ஜனசங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்து அப்பேரணிக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் கே.என். லட்சுமணனும் ஒருவர்.
ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு... தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்... ஹைகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம்
ஆனால் பாஜகவினரின் ராமர் சீதை ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசாரின் தடையை மீறி ராம பஜனை பாடல்களை பாடிக்கொண்டே பாஜகவினர் ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தடையை மீறி செல்ல முயன்ற 50 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.