எல்லா எம்பியும் சேருவோம்.. சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுப்போம்.. முதல்வர் அழைப்பு!
சென்னை: சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலைகளை தனியாருக்கு விற்பனை செய்ப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையின் படி, இரு கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து சென்று, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனுவை அளிக்கலாம் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இரு அவைகளிலும் உள்ள இரு கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் இரும்பாலை கடந்த 1981-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்டது. தற்போது, சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த உருக்காலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் பொதுத்துறையின் செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்) நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடக மாநிலம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய 3 உருக்காலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை உருக்காலை தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில், ஐஎன்டியூசி, பாட்டாளி தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், நிலம் கொடுத்தோர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தனியார் மயமாக்குதலை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.