மெகா ரெய்டு.. பதறிய பத்திர ஆபிஸ்கள்.. சேலம் பத்திர அலுவலகத்தில் கணக்கில் வராத பல ஆயிரம் சிக்கியது
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணக்கில் வராத ரூ. 92 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களை குறிவைத்து மிகப்பெரிய அளவில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதுமே பத்திர பதிவு அலுவலங்கள் பரபரப்பாக காணப்பட்டது. திருச்சி, மருதாண்டகுறிச்சியில் உள்ள உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில், ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பத்திர பதிவு அலுவலகத்திலும் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் அவினாசி சர்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புபோலிசார் சோதனை நடத்தி ரூ35 ஆயிரம பணத்தை பறிமுதல் செய்தனர்.
தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் தனசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், பத்திர எழுத்தர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரித்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறை அனைத்து ஊர்களில் மாலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை சொல்லிவைத்தார் போல் மொத்தமாக சோதனை நடத்தினர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலங்கள் பரபரப்புடன் காணப்பட்டது.