சேலம் தற்கொலையில் திருப்பம்: காதலித்ததால் மகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை
சேலம்: சேலத்தில் தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக மாற்று சமூக இளைஞரை மகள் காதலித்ததால் ஆத்திரத்தில் மகளை கொன்றுவிட்டு, தாய், தந்தை தற்கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி மற்றும் அவரது தாய், தந்தை உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மகனை மட்டும் பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டு 3 பேரும் உயிரிழந்த சம்பவம் சேலம் பூலவாரி ஆத்துக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவை சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கைது
லாரி ஓட்டுநர்
சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த பூலவாரி ஆத்துக்காட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார்(43), இவர் அந்த பகுதியில் டேங்கர் லாரி ஓட்டிவந்தார். இவரது மனைவி சாந்தி (32), இவர்களுக்கு ரம்யா லோஷினி(19), என்ற மகளும், தீனதயாளன்(17) என்ற மகனும் இருந்தனர். மகள் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மகன் தீனதயாளன் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளான்.
பாட்டி வீட்டில் தூங்கு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை மகனை தனது தாய் வீட்டுக்கு ராஜ்குமார் அனுப்பி வைத்துள்ளார். இன்று இரவு ஒரு நாள் மட்டும் அங்கு தூங்கிவிட்டு, காலையில் வா என மகனிடம் ராஜ்குமார் சொல்லி இருக்கிறார். இதையடுத்து மகன் தீனதயாளனும் பாட்டிவீட்டில் தூங்கிவிட்டு காலையில் வீட்டுக்கு வந்துள்ளான்.
பூட்டப்பட்ட வீடு
வீடு காலையில் பூட்டப்பட்டிருப்பதை கண்ட தீனதாயளன் வீட்டின் கதவை தட்டியுள்ளான். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளான். அங்கு தனது தாய், தந்தை மற்றும் அக்கா ஆகியோர் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தீனதாயளன், அய்யோ, அம்மா, அப்பா, அக்கா என அலறியுள்ளான்.
அக்கம் பக்கத்தினர்
இந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து ராஜ் குமார், சாந்தி, ரம்யா ஆகிய மூவரும் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில், இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியான கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்தனர்
இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது உறவினர்கள் 3 பேரின் உடல்களை கண்டு கதறி அழுதனர்.
கடிதம் சிக்கியது
இதையடுத்து வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ராஜ்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் என் வங்கியில் உள்ள பணம் மற்றும் நகைகள் எனது மகனுக்கு மட்டுமே சொந்தம் என எழுதியிருந்தார். இதையடுத்து ஏன் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என போலீசார் விசாரணை நடத்தினர்.
காதலால் தற்கொலை
இதில் மாற்று சமூக இளைஞனை ரம்யா காதலித்து வந்தாராம். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து சண்டை போட்டு வந்தார்களாம். சம்பவத்தன்னு மகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தோற்றதால், அவரை கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தூக்கில் தொங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மாணவியை பெற்றோரே கொன்றுவிட்டு, பின்னர் அவர்களும் தற்கொலை செய்தனரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.