எவன் அழிக்க நினைத்தாலும் அழிந்துபோவது உறுதி... சேலம் திமுகவில் புதிய முழக்கம்
சேலம்: சேலம் மேற்கு மாவட்டச் பொறுப்பாளராக பதவியேற்ற செல்வகணபதி வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற போது அங்கு எழுப்பப்பட்ட முழக்கம் தான் கட்சியில் உட்கட்சி மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
கலைஞர், சேலத்து சிற்பி வீரபாண்டியார், தளபதி ஸ்டாலின் வளர்த்த கட்சியை, எவன் அழிக்க நினைத்தாலும் அழிந்துபோவது உறுதி என திமுகவினர் எழுப்பிய முழக்கம் வீரபாண்டி ராஜாவை மனதில் வைத்துதான் என கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வகணபதி வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீரபாண்டி ராஜா அதை புறக்கணித்து வீட்டிலேயே இருந்துவிட்டார். வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்துக்கு செல்வகணபதி சென்று மரியாதை செய்த போதும் வீரபாண்டி ராஜா அதில் கலந்துகொள்ளவில்லை.
தன்னிடம் இருந்த மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதால் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனக் கூறுகின்றனர் சேலம் மாநகர திமுகவினர். புதிய மாவட்ட பொறுப்பாளரான செல்வகணபதிக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு அதாவது வீரபாண்டி ராஜா இருந்த இடத்திற்கு மாவட்ட பொறுப்பாளராகி உள்ள சிவலிங்கம் வீரபாண்டி ராஜாவை பற்றி சட்டை செய்ததாக தெரியவில்லை. ஸ்டாலின் கொடுத்த தைரியத்தில் அவர் அரசியல் பணிகளை உற்சாகமாக தொடங்கிவிட்டார்.
ஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி
வீரபாண்டி ராஜா வீட்டில் இருப்பதை அறிந்த சேலம் மேற்கு மாவட்டபொறுப்பாளர் செல்வகணபதி திடீரென அவரை வீட்டிற்கே சென்று சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது இறுக்கத்துடன் இருந்த ராஜா, தனது கவலையை ஓரங்கட்டி வைத்துவிட்டு செல்வகணபதிக்கு பதில் மரியாதை கொடுத்து சிறிதுநேரம் அவருடன் பேசி அனுப்பி வைத்தார். சேலம் மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் தாங்களாகவே முன் வந்து ராஜினாமா செய்வதை எதிர்தரப்பினர் ரசிக்கின்றனர்.