இங்க பாரு.. உண்மையை சொல்லு.. இல்லாட்டி ரத்த வாந்தி எடுப்பே.. பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை
இளம்பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை சாமியாரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சேலம்: "ரத்த வாந்தி எடுப்பே.. உண்மையை சொல்லு.. உனக்கு பேய் பிடிச்சிருக்கா.. எந்த ஊரு நீ.." என்று திருநங்கை சாமியார் கேள்வி கேட்டு இளம்பெண்ணை பிரம்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் ஒரு காளியம்மன் கோயில் இருக்கிறது.. இங்கு ஒரு திருநங்கை வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அருள்வாக்கு சொல்வார்.. யாருக்கெல்லாம் பேய் பிடித்திருக்கிறதாக சொல்கிறார்களோ, அவர்களை இந்த திருநங்கையிடமும் அழைத்து வருவார்கள்.
இவரும் குறிப்பிட்ட அந்த நாட்களில் பேயை ஓட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் இவர் மிகவும் பிரபலம்.. அருள்வாக்கு சொல்வதாக இருந்தால் மயிலிறகால் வருடுவாராம்.. பேய் பிடித்திருப்பதாக சொன்னால் பிரம்படி தந்து பேயை ஓட்டுவாராம். இதுதான் இவரது ஸ்பெஷல்!
சாமியார்
இந்நிலையில், இளம்பெண் ஒருவருக்கும் இவர் பேய் ஓட்டி உள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.. சேலம் பகுதியை சேர்ந்தவர்தான் அந்த இளம்பெண்.. திருநங்கை உட்கார்ந்திருக்கிறார்.. அவர் முன் இளம்பெண்ணை உட்கார வைக்கின்றனர்..
வயலில் கிடந்த கவுசிகா சடலம்.. பைக்கில் மர்ம நபர்.. வீடியோ காலில் பேசியது யாருடன்.. பரபரக்கும் சேலம்
விபூதி
உடனே திருநங்கை, விபூதியை அள்ளி அந்த பெண்ணின் தலையில் போடுகிறார்.." நீ எந்த ஊரு பேய்? உன்பெயர் என்ன?" என்று கேட்க அதற்கு அந்த பெண் தன் பெயரை சொல்கிறார்.. "உனக்கு பேய் பிடிச்சிருக்கா.. பேயா பிடிச்சிருக்கு.. சொல்லு.. பேயா பிடிச்சிருக்கு..?" என்று கேட்டு கொண்டே கையில் வைத்திருந்த பிரம்பால் சரமாரியாக அடிக்கிறார்.
பிரம்படி
அதற்கு அந்த இளம்பெண்ணும், "ஆமா.. எனக்கு பேய்தான் பிடிச்சிருக்கு.. நான் எங்கிருந்து வந்தேனோ, அங்கியே போயிடறேன்" என்று சொல்கிறார்.. ஆனாலும் திருநங்கை சாமியார் விடவேயில்லை.. தொடர்ந்து பிரம்பால் விளாசி கொண்டே இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாத அந்த இளம்பெண், "இல்லை.. எனக்கு பேய் பிடிக்கல.. நான் பொய் சொன்னேன்.. நான் ஒருத்தரை லவ் பண்றேன்.. ஆனால் வீட்டில் எனக்கு வேற மாப்பிள்ளையை பார்க்குறாங்க.. எனக்கு அது பிடிக்கல.. அதனாலதான் பேய் பிடிச்சிருக்கிறதா பொய் சொன்னேன்" என்கிறார்.
பொய் சொன்னியா?
இதை கேட்டதும் திருநங்கை சாமியாருக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது... "என்கிட்டேயே பொய் சொன்னியா" என்று கேட்டு திரும்பவும் அடிக்கிறார்.. உடனே ஒரு கற்பூரத்தை கொண்டு வர சொல்கிறார்.. அந்த காதலனை மறக்கிறேன் என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்யும்படி சொல்கிறார்.. உடனும் பெண்ணும் கற்பூரத்தின்மேல் சத்தியம் செய்யாமல், தரையில் அடித்து சத்தியம் செய்கிறார்.
மறந்துவிடுகிறேன்
அந்த பெண்ணின் தந்தை அங்கு வரவழைக்கப்படுகிறார்.. "நான் பொய் சொல்லிட்டேன்..ப்பா, என் காதலை மறந்துவிடுகிறேன்.. நீங்க பார்க்கும் மாப்பிள்ளையையே கல்யாணம் செய்துக்கிறேன்" என்கிறார். இப்படி ஒரு வீடியோதான் வைரலாகி வருகிறது.. வீடியோவை எடுத்ததும், வெளியிட்டதும், சாமியார் தரப்புதான் என்கிறார்கள்.
விசாரணை
ஆனால், இது சம்பந்தமாக கன்னங்குறிச்சி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். காதலுக்காக இளம்பெண் பொய் சொன்னதும்.. அந்த காதலை மறைக்க பேய் பிடித்ததாக சொல்வதும், அதற்கு பிரம்படி விழுவதும், கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யப்படுவதும் என்ற இந்த பதைபதைப்பு வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.