ஹைகோர்ட் அனுமதி பெற்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை.. முதல்வர் அறிவிப்பு
சேலம்: சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடையை மூடுவது தொடர்பாக போலீசாருக்கும் கடை உரிமையாளர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்ற அனுமதியுடன் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
பசியைவிட கொரோனா பரவாயில்லை.. உ.பி.யிலிருந்து பணிக்கு திரும்பும் 30 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
மேலும் கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவுடன் நாளை ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கொரோனா தொற்று பரவலை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திணறுகின்றன என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தலைவாசலில் அமைக்கப்பட்டுவரும் கால்நடை பூங்கா மூலம் நமது நாட்டு இன மாடுகள் மற்றும் நாய்கள், கோழிகள் அழியாமல் பாதுகாக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.