கட்சிக்கு ஒபிஎஸ்.. ஆட்சிக்கு இபிஎஸ்.. செம்மலையும் மாறினார்.. அதிமுகவில் மாறும் காட்சிகள்!
சேலம்: கட்சிக்கு ஒபிஎஸ் என்றும் ஆட்சிக்கு இபிஎஸ் என்றும் அதிமுகவில் குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கடந்த முறை ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த செம்மலை இம்முறை, எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சியை ஓ பன்னீர்செல்வம் நிர்வகிக்க வேண்டும் என்றும் இதையே நிர்வாகிகள் விரும்புவதாகவும் கூறினார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சலசலப்பு நிலவுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கேட்டு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் ஆட்சியில் சிறப்பாக செயல்படுவதால், தன்னுடைய தலைமையிலேயே வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும் எனறு கூறியுள்ளார். இதனால் இருவரில் யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பது என்பதில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
"விட்டுட்டார் ஓபிஎஸ்.. நின்னுட்டார் இபிஎஸ்".. சலசலக்கும் அதிமுக கோட்டை.. இது திமுகவுக்கு தானே லாபம்?
எடப்பாடிக்கு ஆதரவு
அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுவரை ஓ பன்னீர்செல்வத்திற்கு யாரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளரை ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ சேர்ந்து அறிவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஓ பன்னீர்செல்வத்தை சமாதனம் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது,
செம்மலையும் ஆதரவு
கொங்கு மண்டல அதிமுகவில் முழுமையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது. இதேபோல் பல மாவட்டங்களிலும் நிர்வாகிகள் எடப்பாடிக்கே ஆதரவு குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த சூழலில் கடந்த 2017ம் ஆண்டு முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கிய போது, ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது அணியில் சேர்ந்தவர் செம்மலை எம்எல்ஏ. இவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு முதல்முறையாக அமைந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது அவருக்கு எதிராக வாக்களித்தவர் ஆவார். ஒபிஎஸ் உள்பட 11 பேர் அப்போது எதிராக வாக்களித்தனர்.
கட்சிக்கு ஒபிஎஸ்
இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் இணைந்த போது அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் மாறினார். இந்நிலையில இப்போது முதல்வர் வேட்பாளர் பிரச்சனையில் செம்மலை, இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அதிமுகவில் அணிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். செயற்குழு கூட்டத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. திமுக கூட்டணி தலைவராகவும், முதல்வர் வேட்பளாராகவும் முக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவும் முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்டினால் தான் தேர்தலுக்கு நல்லது. கட்சியிலும், ஆட்சியிலும் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என செயற்குழுவில் தெரிவித்தேன்.
யாருக்கு ஆதரவு
கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சிறப்பாக செயல்படுகிறார். ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார். இதைத்தான் நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்றாலும் வருகிற 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றார்.