சிவனடியார் தற்கொலை வழக்கு: சேலம் மாவட்ட எஸ்.பி கண்காணிக்க ஹைகோர்ட் ஆணை
காவல்துறை தாக்கியதில் மனமுடைந்து சிவனடியார் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சேலம் மாவட்ட எஸ்.பி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம்: சிவனடியார் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை தேவூர் காவல் துறையே தொடரலாம் என்றும், அந்த விசாரணையில் சிவனடியாரின் வீடியோ பதிவையும் ஒரு ஆவணமாக கொண்டு விசாரிக்க வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேவூர் காவல் நிலைய ஆய்வாளர் நடத்தும் விசாரணையை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குண்டாங்கல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் சரவணன். இவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தேவூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னுடைய தற்கொலை முடிவுக்கு காரணம் தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தான் என்றும், அவர் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக சிவனடியார் சரவணன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த வழக்கை தேவூர் காவல்நிலையம் விசாரணை நடத்தினால் நியாயமான விசாரணை நடக்காது என்பதால் சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு இந்து மக்கள் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.பாஸ்கர் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிவனடியார் சரவணன் மரணத்தில் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீதான குற்றச்சாட்டுடன் எந்த புகாரும் வரவில்லை என்றும், சரவணனின் மரணம் குறித்து அவர் மனைவி சாந்தி மட்டுமே அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிவனடியார் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையே தேவூர் காவல் துறையே தொடரலாம் என்றும், அந்த விசாரணையில் சிவனடியாரின் வீடியோ பதிவையும் ஒரு ஆவணமாக கொண்டு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் விசாரணையை விரைந்து நடத்தி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
தேவூர் காவல் நிலைய ஆய்வாளர் நடத்தும் விசாரணையை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.