வீரபாண்டி ராஜாவுக்கு வலைவிரிக்கும் பாமக... கைகூடுமா முயற்சி...?
சேலம்: திமுக தேர்தல் பணிக் குழு செயலாளரும், சேலம் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான வீரபாண்டி ராஜா தலைமை மீது அப்செட்டில் உள்ளதால் அவரை பாமகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதாம்.
ஆனால் தனது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயருக்காகவும், அவருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் தனக்கு வரும் வாய்ப்புகளை தட்டிக்கழித்து வருகிறாராம் வீரபாண்டி ராஜா. மேலும், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஒரு சில வாக்குறுதிகள் கொடுத்துள்ளதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதை அவர் செய்துகொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் வீரபாண்டி ராஜா. இதனால் தற்போதைக்கு தனக்கு மாற்றுக் கட்சி செல்லும் எண்ணமில்லை என தன்னிடம் தூது வந்தவர்களிடம் ராஜா கூறியிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை வீரபாண்டி ஆறுமுகம் தான் திமுகவின் முகமாக இருந்தவர். இவரது மகனான வீரபாண்டி ராஜா இன்னும் தனது அப்பா காலத்தில் செய்த அரசியலை போல் இப்போதும் செய்ததால் அவரிடம் பதவி பறிக்கப்பட்டது. இதனால் திமுக தலைமை மீது மிகுந்த மனவருத்தம் கொண்ட அவரை கே.என்.நேரு சமாதானம் செய்து வைத்தார். இருப்பினும் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற வீரபாண்டி ராஜா கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் கிஷோர் செய்த உருப்படியான வேலை இது மட்டுமே... நொந்துகொள்ளும் உ.பி.க்கள்
இந்த சூழலில் தான் வீரபாண்டி ராஜாவுக்கு அதிமுக தரப்பில் இருந்தும், பாமக தரப்பில் இருந்தும் ஆஃபர்கள் சென்றிருக்கின்றன. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. ஆனாலும் பாமகவிற்கு ராஜாவை அழைத்து வரும் முயற்சிகள் இன்னும் தொடருகிறதாம். இதனிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி பிரபு மீது திமுக தலைமைக்கு நல்ல அபிப்ராயம் இருந்து வருகிறது. இதனால் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட்டு பிரபு அரசியலில் ஒரு வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.