சேலத்தில் கொரோனா பாதித்த இந்தோனேஷியர்கள் சென்று வந்த 5 மசூதிகளை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல்
சேலம்: சேலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த இந்தோனேஷியர்கள் சென்று வந்த 5 மசூதிகளை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
Recommended Video
சேலம் மாவட்டத்திற்கு இந்தோனேஷியாவில் இருந்து வந்த மதபோதகர்கள் உள்பட 16 பேர் கொரோனா அறிகுறிகளுடன் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 2 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 61 வயது முதியவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தோனேஷியர்கள் மதபோதனைக்காக சென்ற கிச்சிப்பாளைம், சூரமங்கலம், களரம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சன்னியாசிகுண்டு, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிரமாக வீடு வீடாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்பின்னர் 350 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 23 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே இந்தோனேசியர்கள் சென்று வந்த ஐந்து மசூதிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மசூதியை சுற்றியுள்ள 25 ஆயிரம் வீடுகளக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மசூதியை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளும் கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு நேற்று காலை சீல் வைக்கப்பட்டள்ளது. இங்குள்ள பொதுமக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வெளியே சென்று பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர் என்றும் வெளியாட்கள் யாரும் அந்த பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பு உள்ளதா? கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.