மார்கழி சனிக்கிழமை பெருமாளை வழிபட்டு இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிச்சாமி
மார்கழி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்றைய தினம் முதல்வர் பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலம் மாவட்டத்தில் இருந்து தொடங்கினார்.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து ஆரம்பித்துள்ளார். மார்கழி மாதம் சனிக்கிழமை பஞ்சமி திதியான இன்று பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வழிபட்ட பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிச்சாமி.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சியினர் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்துவதன் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொகுதிகளை வலம் வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மாவட்ட ரீதியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளை சந்திக்கின்றனர். போகும் வழியெங்கும் மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் 2021
தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பெயர் சேர்த்தல் பணிகளை முடித்துள்ளது. விரைவில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது தேர்தல் ஆணையம்.
எதிர்கட்சி விறுவிறுப்பு
கொரோனா பரவல் காலமாக இருந்தாலும் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வேலைகள் படுஜோராகவே நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட ரீரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் ஒருபக்கம், கனிமொழி மறுபக்கம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை மதுரையில் ஆரம்பித்து தென்மாவட்டங்களில் மக்களை சந்தித்து நான்கு நாட்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டார். கமல் போகும் இடங்களில் எல்லாம் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ்
ஆளும் கட்சியான அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இல்லாமல் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் சட்டசபைத் தேர்தலை அக்கட்சி சந்திக்கவுள்ளது. இந்த தேர்தல் இரு தலைமைகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல் என்பதால் மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தீவிரமான நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அடிக்கடி மக்களை சந்தித்து பேசி வரும் முதல்வர் பழனிச்சாமி இன்றைய தினம்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தனது தேர்தல் பிரச்சார பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார்.
சனிக்கிழமை பெருமாள் கோவில்
மார்கழி மாதம் சனிக்கிழமையான இன்றைய தினம் பஞ்சமி திதியாகும்.எடப்பாடி தொகுதியில் இருந்து இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி. சட்டசபைத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குவதாக தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. சேலம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வழிபட்ட பிறகு பிரச்சாரம் தொடங்குகிறார் முதல்வர் பழனிச்சாமி.