அதிமுகவின் எஃகு கோட்டை இது - 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் - முதல்வர்
எடப்பாடி தொகுதியில் கடந்த 43 ஆண்டுகளாக அதிமுகவை தவிர வேறு யாரும் வெற்றி பெற்றதே கிடையாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம்: எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். முதல்வர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது. எல்லா தலைவர்களும் திரண்டு வந்து பிரச்சாரம் செய்தாலும் எடப்பாடியில் திமுக வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முதல்நாள் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தொடங்கினார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக அவர் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடாத நிலையிலும், கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றியும் முடிவு செய்யப்படாத நிலையில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் முதல்வர் பழனிச்சாமி. திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் காத்திருந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் அவரை வரவேற்றனர்.
வெற்றிகரமான ஆட்சி
பிரசாரத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, இந்த ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று எதிர்கட்சியினர் சொன்னார்கள். பல்வேறு தடைகளை தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர்மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமிதத்துடன் கூறினார்.
சரித்திர சாதனை
புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது.
உயர்கல்வி
உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் . தமிழகத்தில் உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம் 49 விழுக்காடு சாலை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதிமுக எஃகு கோட்டை
எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றிபெற்றதில்லை முதல்வர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது.
7.5 சதவிகித இட ஒதுக்கீடு
தான் ஒரு அரசுப் பள்ளி மாணவன் என்ற முறையில் அவர்களது நிலையை உணர்ந்தவன் . அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
தடைகளை தாண்டிய ஆட்சி
நான் முதல்வராவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. 2021ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக சார்பில் முதன் முதலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.