21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி
சேலம்:வீரமரணமடைந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் உடல், முழு ராணுவ மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் படை நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார் மதியழகன் (40).
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர் ஊராட்சி வெற்றிலைக்காரன்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். 1999ம் ஆண்டு முதல் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் முதல் நிலை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.
கடைசியாக , கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார் மதியழகன். இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் எல்லை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது பாகிஸ்தான் படை வீரர்களின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் டெல்லியில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டது. கோவையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு வாகனத்தில் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கு சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.
திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் சென்று மதியழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிதி உதவியை மதியழகன் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதன் பிறகு 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம் செய்யப்பட்டது.