கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து விட்டாரே எடப்பாடி.. செம நக்கல் விட்ட தினகரன்
Recommended Video
சேலம்: கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கிணற்றில் இறங்கியுள்ளதாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல், பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 28 தொகுதிகளில், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு தரப்பட உள்ளன. இதுகுறித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: 40 தொகுதிகளிலும் தோற்க போகிற கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன என்றார்.
இந்தியாவின் பிரதமரை தமிழகம் தான் நிர்ணயிக்கும் என்றும் அந்த வாய்ப்பு அமமுகவிற்கே உள்ளதாகவும் கூறினார். அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைப்பதை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது என்று கூறிய தினகரன்,
இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கப் போகிறார்கள் என்று விமர்சித்தார்.
பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி தற்கொலைக்கு சமம் என்றும் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும் எனவும் கூறினார்.