ஏற்காடு வனப்பகுதியில் பயங்கர தீ.. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்.. தீயை அணைக்க போராட்டம்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள காப்புக்காட்டில் தீ பரவி உள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள காப்புக்காட்டில் நேற்று நள்ளிரவு தீ பற்றி எரிந்தது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் காப்புக் காட்டில் உள்ள புற்கள் காய்ந்து உள்ளதால், கடும் வெப்பத்தின் தாக்கத்தால் திடீரென தீப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்த போராட்டம்
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
50க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவின்பேரில் தீ விபத்து ஏற்பட்டுள்ள காப்புக் காட்டில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகே உள்ள விநாயகம் பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
தீ விபத்து காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைகிராம சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் தீயால் கிராம மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மரங்கள் நாசம்
முன்னதாக, நீலகிரி வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலாயின கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஆங்காங்கே நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.