கருணாநிதி இருந்தபோதே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை.. முதல்வர் அட்டாக்!
திமுகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.
சேலம்: ஆள் வைத்து கட்சி நடத்துவது திமுக என்றும், சொந்தமாகவே உழைக்கிற கட்சி அதிமுகதான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் பூலாவரி என்ற இடத்தில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர் கூறியதாவது:
வலிமையான இயக்கம்
தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் வாரிசு என யாருமே கிடையாது. தொண்டர்களாகிய நாம்தான் அதிமுகவின் வாரிசு. தொண்டர்கள் இருக்கும் இயக்கமே வலிமையான இயக்கம். இளைஞர்கள் என்றுமே இருக்கும் இயக்கம் அதிமுகதான்.
அதிக நலத்திட்டங்கள்
எம்ஜிஆரின் கனவுகளை நனவாக்கியவர் ஜெயலலிதா. அவர் தான்இந்தியாவில் அதிக சோதனைகளை எதிர்கொண்டவர். இந்தியாவிலேயே அதிக திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்திய அரசும் அதிமுக அரசு தான். 1.84 கோடி குடும்ப அட்டைதாரருக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும்36 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது
திமுக வரவே முடியாது
28 ஆண்டு காலமாக திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதே அதிமுக ஆட்சியை எதுவுமே செய்ய முடியவில்லை. மு.க. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்? எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து என்னதான் விரட்டினாலும் ஒன்றும் நடக்க போவது இல்லை. திமுகவால் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது,
நான் தொண்டன்தான்
ஆள் வைத்து உழைக்கிற கட்சி திமுகதான். ஆனால் அதிமுகவோ சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி. நான் முதல்வராக இருந்தாலும் மக்களிடம் பேசுகையில் தொண்டனாக மட்டுமே பேசி வருகிறேன்." இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.