முதலமைச்சரின் திடீர் பிரச்சாரம்... சற்றும் எதிர்பார்க்காத ஓ.பி.எஸ்... முணுமுணுக்கும் நிர்வாகிகள்..!
சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென தொடங்கியிருப்பது தான் அதிமுகவில் பேசு பொருளாக உள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படாத நிலையில் முதலமைச்சர் தனது சுற்றுப்பயணத்தை தனித்து தொடங்கிவிட்டார்.
இது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கமல்ஹாசன் இன்று 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார்!
பிரச்சார சுற்றுப்பயணம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வரும் நிலையில் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நங்கவள்ளி
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்தமாவட்டமான சேலம் நங்கவள்ளி ஒன்றியத்தில் நேற்றைய தினம் திடீர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தான் அவர் வெளியிட்டார். அதுவரை தனது பிரச்சாரப் பயணம் குறித்த எந்த தகவலும் வெளியில் கசியாமல் பார்த்துக்கொண்டார்.
ஓபிஎஸ் ஏமாற்றம்
இதனிடையே இந்த நிகழ்வை அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். சற்றும் எதிபார்க்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. புரோட்டகால் பிரகாரம் ஒருங்கிணைப்பாளரான தாம் தான் கட்சி சார்பிலான பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என எண்ணியவருக்கு இது ஏமாற்றத்தையும், அதிருப்தியை அளித்திருக்கிறது. இருப்பினும் இதனை அவர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மூத்த நிர்வாகிகளிடம் மட்டும் இது குறித்து விவாதித்திருக்கிறார்.
முதல்வர் அறிவிப்பு
பிரச்சாரத்தை தொடங்கிய முதல்நாளே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் ரூ.2500 வழங்கப்படும் என்ற தித்திப்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழகம் தழுவிய அளவில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சீனியர் நிர்வாகிகள் சிலரும் முதலமைச்சரின் பிரச்சாரம் குறித்த தகவலை தங்களிடம் கூட முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லையே என முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.