நடராஜனை வரவேற்க அமைத்த மேடை, பதாகைகள் திடீர் அகற்றம்.. கடும் கெடுபிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சேலம்: கிரிக்கெட் வீரர் நடராஜனை வரவேற்று, வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில், டி20, ஒன்டே மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக களம் கண்டார். முதல் தொடரிலேயே, சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்தபோது, வெற்றிக் கோப்பையை கைகளில் ஏந்தி, உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்த்தார்.
சொந்த ஊரில் வரவேற்பு
இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, நடராஜன் தாயகம் திரும்பியுள்ளார். நடராஜனை வரவேற்க அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் வரவேற்பு பதாகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதேபோல் அவரது வீட்டின் அருகே அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.
மேடை அகற்றம்
இந்த நிலையில் கொரொனா பரவலை தடுக்க, கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு மாவட்ட சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் வரவேற்பு நிகழ்ச்சி எளிமையாக நடத்த அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, வாழ்த்து தெரிவிக்க அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டது.
14 நாட்கள் தனிமை
இதுகுறித்து ஊர்க்காரர்கள் கூறுகையில், நடராஜனுக்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கூட்டம் சேர வேண்டாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துவிட்டது. எனவே பிளக்ஸ் போர்டுகளை கூட அகற்றிவிட்டனர் என்றார் ஆதங்கத்தோடு.
கெடுபிடி தேவையா
வரவேற்பு வழங்க கூட்டம் போட வேண்டாம் என்று கூறினால் ஓகே. எதற்காக வரவேற்பு பதாகைகளையும் அகற்றினர் என்று கேட்கின்றனர் ரசிகர்கள். நம்ம ஊர் பையன் உலக அரங்கில் கலக்கியிருக்கும்போது, அதை பிளக்ஸ் போர்டு வைத்து வரவேற்க தடுத்து, இந்த கெடுபிடி அவசியமா? அரசியல் கூட்டங்களில் மக்கள் கூடும்போது அனுமதி கொடுத்துவிட்டு நடராஜனுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.