இந்த நேரம்.. நல்ல நேரம்... விறுவிறுனு உயர்கிறது மேட்டூர் அணை!
Recommended Video
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதன் எதிரொலியாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நாளுக்கு , நாள் அதிகரித்து வருவதால், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் கடந்த 5 நாட்களில் 5.09 அடி உயர்ந்து, தற்போதைய நீர்மட்டம் 44.22 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 291 கன அடியாக அதிகரித்துள்ளதால், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இதற்கிடையே குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நீண்ட வரிசை
தற்போது, மழைப்பொழிவு குறைந்ததால், குற்றால அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. எனினும், விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும்
வரிசையில் நின்று குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கனமழை பெய்ய வாய்ப்பு
இதேபோல் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை எதிரொலி காரணமாக, தேக்கடி ஏரி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வெறிச்சோடியது
தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்ததால் தேக்கடி ஏரி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் படகுகள் கரைப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.