நாடு விடுதலைக்குப் பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
சேலம்: நாடு விடுதலைக்குப் பின் முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை இன்று திறந்துவிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இன்று நீரை திறந்து வைத்தார்.
Recommended Video
டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12 அல்லது 18 தேதிகளில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் டெல்டா பகுதிகளில் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். பின்னர் சம்பா, தாளபடி சாகுபடியும் மேற்கொள்ளப்படும். மேட்டூர் அணை கட்டப்பட்டு மொத்தம் 88 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஜூன் 12-ந் தேதியன்று 18 முறையும் ஜூன் 12-க்கு முன்னதாக 10 முறையும் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. போதுமான நீர் இல்லாத நிலையில் மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர்தான் பெரும்பாலும் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையை நாளை திறக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்...கடைமடை வரை தண்ணீர் சென்று சேருமா?
மேட்டூர் அணை நீர் மட்டம்
தற்போது கோடைகாலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 47,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முன்னரே நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
நாடு விடுதலைக்குப் பின் முதல் முறை
மேட்டூர் அணை கட்டப்பட்டு 77 ஆண்டுகளுக்குப் பின்னர் கோடை காலத்தில் டெல்டா பாசனத்துக்காக இன்று நீர் திறந்துவிடப்பட்டது. நாடு விடுதலைக்கு முன்னர் 1942,1943-ம் ஆண்டுகளில் மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர் திறப்பு
மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் வருகை தந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மேட்டூரில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு தங்கினார். இன்று முற்பகல் 11.15 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீர் மீது மலர் தூவினார் முதல்வர் ஸ்டாலின்.
மேட்டூர் அணையில் இருந்து..
மேட்டூர் அணையில் இருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் அடுத்த 3 நாட்களில் திருச்சி கல்லணையை சென்றடையும். பின்னர் கல்லணையில் இருந்து கால்வாய்கள் மூலமாக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும். முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி பாசன விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.