கொடுமை.. லாக்டவுன் உத்தரவை மீறி இயங்கிய ஜவ்வரிசி ஆலையில் கசிந்த விஷவாயு.. 2 பேர் பலி.. சேலம் அருகே
சேலம்: சேலம் அடுத்த ஆத்தூர் அருகே, ஊரடங்கு தடையை மீறி இயக்கிய ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியா முழுக்க லாக்டவுன் நடைமுறையிலுள்ளது. வரும் 14ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று, 18வது நாளில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
இந்த காலக்கட்டத்தில் எங்குமே தொழிற்சாலைகள் இயங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் அருகே சதாசிவபுரம் பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலை ஒன்று தடையை மீறி செயல்பட்டு வந்துள்ளது.
இந்த ஆலையில் எதிர்பாராதவிதமாக இன்று காலை விஷவாயு கசிந்து தாக்கியுள்ளது. இதில் அங்கு பணியாற்றிய ஆறுமுகம் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
தடையை மீறி தொழிற்சாலை இயக்கப்பட்டதும், அங்கே விஷவாயு கசிந்து விபத்து நடைபெற்றதும் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, ஜவ்வரிசி ஆலை உரிமையாளரை வலை வீசி தேடி வருகிறார்கள்.