ஏற்காட்டில் பரிதாபம்.. மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. 2 பேர் உயிரிழப்பு!
சேலம்: சேலம் ஏற்காட்டில் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த சீரியல் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக ஏற்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாய்ண்ட் என்ற பகுதியில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தினர்.
இதனை தொடர்ந்து ஏற்காடு அருகே உள்ள பெலாத்தூர் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை ஈரோட்டை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டினார். வளைவான பகுதியில் சென்றபோது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனை அறிந்த டிரைவர் சங்கர் மெல்ல வேனை திருப்பினார் .
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன், 30 அடி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த பாண்டியன்(41), மதுரையை சேர்ந்த சஞ்சய் (33) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேனில் இருந்த கௌரி சங்கர், பேச்சியப்பன் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். வேனின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் ஏற்காடு காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி மற்றும் காவல் ஆய்வாளர் ரஜினி, காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர் .
பின்னர் படுகாயமடைந்த 10 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாண்டியன் மற்றும் சஞ்சய் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டம்.. உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்துவது ஏன்? ஹைகோர்ட்டில் அதிமுக வழக்கு