அடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் மரணம்.. சேலத்தை சோகத்தில் ஆழ்த்திய இரண்டு காவல் அதிகாரிகள்!
சேலம்: சேலத்தில் அடுத்தடுத்து இரண்டு காவல் அதிகாரிகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர்.
நோய் தடுப்பு பணியில் எதிர்பாராத விதமாக மருத்துவர்களும், காவலர்களும், அரசு அலுவலர்களும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சம்பத்குமார் (வயது53) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள இடுகாட்டில் 18 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள போதைபொருள் தடுப்பு காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன் (வயது 46) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரண்டு அதிகாரிகளின் மரணங்களும் சேலம் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது