வீராணம் பஞ்சாயத்து தலைவர் மாதிரி வருமா.. சொந்த பணத்தில் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து அசத்திட்டாரே
சேலம்: நிதி கேட்டு கிடைக்கவிடாததால், மனம் தளரவில்லை, வீராணம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம். தனது சொந்தப் பணத்தில், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து சாதித்துள்ளார்.
Recommended Video
சேலம் மாவட்டம் வீராணம் பஞ்சாயத்து தலைவராக ஆறுமுகம் இருந்து வருகிறார் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆறுமுகம். தான் பதவி ஏற்ற நாள் முதல், மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் திட்ட பணிகளை செய்து வருகிறார். மக்களின் தலைவனாக விளங்கி வருவதால் இவருக்கு கடந்த வாரம் பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஜருகுமலை மற்றும் ஏற்காடு அடிவாரத்தில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடை கால்வாயில் கலந்து வீணாக செல்வதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் இந்த கால்வாயில் இருந்து பைப் மூலம் மோட்டார் அமைத்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவெடுத்தார்.
இதை செயல்படுத்த போதிய நிதி ஆதாரம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டும் கிடைக்காததால் தனது சொந்த முயற்சியின் காரணமாக சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 மீட்டர் தொலைவில் கால்வாயில் இருந்து பைப் மூலம் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை தற்போது ஏரிக்கு கொண்டு வந்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஏரியில் தண்ணீர் நிரப்பும் நிகழ்ச்சியை பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கால்வாயிலிருந்து தண்ணீர் பைப் மூலம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இரண்டு பைப்புகள் மூலம் 24 மணி நேரமும் கால்வாயில் இருந்து தண்ணீரை உறிஞ்சி தற்போது ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டு வருகிறது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சுமார் 1500 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களை வாழ வைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஏரி வறண்ட நிலையில் காணப்படுகிறது
குடிமராமத்து பணியும் இந்த ஏரிக்கு கொடுக்கப்படாததால் ஏரியில் முட்புதர்கள் ஆக காட்சியளிக்கிறது இருப்பினும் ஏரியில் நீர் ஆதாரத்தை பெருக்க ஊராட்சி மன்ற தலைவர் தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு வருவது வீராணம் மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் கூறும்போது, வீராணம் ஊராட்சிக்கு கழக எந்த நிதியும் முறையாக ஒதுக்கப்படுவது இல்லை என்றும் இதற்காக வருத்தப்படாமல் வீராணம் பகுதியில் உள்ள நிதி ஆதாரங்களை பெருகி மற்றும் தன்னார்வலர்களின் உதவியை நாடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருவதாகவும் அதன்படி தற்போது கால்வாயில் இருந்து சொந்த முயற்சியின் காரணமாக குழாய் பதித்து தண்ணீரைக் கொண்டுவந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயலை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஊராட்சிமன்ற தலைவரின் இந்த செயல், வீராணம் மக்களை விழிபிதுங்க வைத்துள்ளது. இதுபோன்ற ஊராட்சி மன்ற தலைவர், ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால், அந்தந்த ஊராட்சிகள் வலுப்பெறும் என்றும், அரசு உதவிக்கரம் நீட்டினால், தங்கள் பகுதி மேலும் வளர்ச்சி பெறும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.