சரியான நேரத்தில் விஜயகாந்த் வெளியே வருவார்.. மக்களை சந்திக்க போகிறார்.. விஜய பிரபாகரன் பேட்டி!
சேலம்: விஜயகாந்த் சரியான நேரத்தில் வெளியே வருவார் என அவரது மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அவ்வப்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அப்போதெல்லாம் கட்சி பணிகளை மைத்துனர் சுதீஷ்தான் கவனித்து கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தோற்றத்தில் விஜயகாந்த் மாதிரி இருக்கும் விஜய பிரபாகரனும் கட்சி பணிகளை கவனித்து கொண்டால் தங்களுக்கு உத்வேகம் பிறக்கும் என கட்சி நிர்வாகிகள் விரும்பினர். இதனால் விஜய பிரபாகரன் அரசியலுக்கு வந்தார்.
சாலிகிராமம்
இவர் பக்குவம் நிறைந்த இளைஞராக இருப்பார் என கருதினால் இவரும் விஜயகாந்துக்கு சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிப்பது போல் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதே வாடிக்கையாகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காகவும் விஜயகாந்தை நலம் விசாரிப்பதற்காகவும் ஒவ்வொரு தலைவராக சாலிகிராமத்தை படையெடுத்தனர்.
மரியாதை
இந்த நிலையில் விஜயகாந்துடனான கூட்டணி குறித்து அதிமுக கண்டபடி பேசினர். இதுகுறித்து விஜய பிரபாகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அப்ப ஏண்டா எங்க வீட்டு பக்கம் வர்றீங்க... என கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாமல் பேசினார்.
சேலத்தில்
ஆனால் அவர் பில்டப் கொடுத்தது போல் தேமுதிக போட்டியிட்ட 4 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சற்று அமைதியாக இருந்த விஜய பிரபாகரன் தற்போது சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
எழுச்சி
அவர் கூறுகையில் விஜயகாந்த் நலமாக உள்ளார். சரியான நேரத்தில் மக்களை சந்திப்பார். தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அனைத்து இடங்களிலும் தேமுதிகவினர் எழுச்சியோடு உள்ளனர் என்றார் விஜய பிரபாகரன்.