மீண்டும் வேண்டும்.. ரோகிணியே வேண்டும்..சேலத்தில் ரவுண்டு கட்டும் போஸ்டர்கள்!
ரோகிணிதான் மறுபடியும் கலெக்டராக நியமிக்க கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
Recommended Video
சேலம்: ரோகிணிதான் எங்களுக்கு திரும்பவும் கலெக்டராக வரவேண்டும் என்று சேலத்தில் மீண்டும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன.
171வது கலெக்டராக பதவியேற்றது முதல் சேலம் மாவட்ட மக்களின் அன்பை பெற்றார் ரோகிணி. "இளவயது கலெக்டர் மக்கள் கோரிக்கைகளை உட்கார்ந்து பொறுமையுடன் கவனிக்கிறாரே" என்று பலரால் பேசப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது, பள்ளி மாணவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி கொள்வது என மக்கள் மனதில் எளிதாக நுழைந்தார்.
இந்த சூழலில்தான் ரோகிணி மாற்றம் என்ற செய்தி வந்தது. இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், எப்படியோ இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று மட்டும் கிசுகிசுக்கப்பட்டது. அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்த்த ரோகினி, சென்னை இசைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் கலெக்டர் ரோகிணியை மாற்றம் செய்யக்கூடாது, அவர்தான் எங்களுக்கு கலெக்டராக வரவேண்டும் என்று பொதுமக்களே வெளிப்படையாக கருத்து சொன்னார்கள். ரோகிணியை கிண்டல் செய்து மீம்ஸ்களை போட்டவர்கள், இன்று அதே ரோகிணிதான் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இதில், அகில பாரத இந்து மகா சபையினர்தான் அன்றுமுதல் இப்போதுவரை தங்களது விருப்பத்தை விடாமல் தெரிவித்து வருகிறார்கள். "தமிழக அரசே! தமிழக அரசே!! நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட பெண் ஆட்சி தலைவர் ரோஹிணியை பணியிட மாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீணடும் ஆட்சிதலைவராக பணியமர்த்த வேண்டும்" என்ற போஸ்டர்கள் சேலம் முழுவதும் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.